ஞானத்தைத் தந்தருளவேண்டும் என்று கேட்கின்ற இந்தப் பாடல் ‘ஆதிபுரி’ எனப்படும் திருவொற்றியூருக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டு எழுத்துகளும் அமைந்துள்ளன.
தனனதன தான தனனதன தான
தனனதன தான தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
களபமுலை தோய அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ்கநக மேனி யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் பெருமாளே.