அண்டமதில் உருவெடுத்தேன் அன்னையாலே,
அன்பாலே நிறை வறிவை (ஞானம்) ஆசான் தந்தார்,
அகாரத்தில் ஆரம்பம் அம்மா என்றால் -
அதிலேயே அடங்கும் இவ்வுலகம் அப்பா,
அனுபூதி அரியணையை நாளும் ஏந்தி,
அறிவெனும் தீபத்தை அதிலே ஏற்றி,
அறியாமை இருள் நீங்க நாளும் இங்கே,
அவதரித்த சக்தி அந்த பெண்ணே என்பேன்,
ஆதி வெளி பரம்பொருளே சாட்சியாக, பெண்ணை
மேதினியில் போற்றாதோர் எவருமுண்டோ,
ஈன்ற தாய் மனையாட்டி ஈண்டில்லாமல்
வாழும் வகை கடினமப்பா-நாளும் நாளும்,
நவ கோளும் உருளுதிங்கே சக்தியாலே
நட்சத்திரக் கூட்டம் எல்லாம் வான் மீதில், .
நடக்குதப்பா நடக்குதப்பா - சக்தி தர்பார்,
நாடகத்தை நடத்தும் அந்த சக்தி தன்னை
நாடோறும் வணங்கிடுவோம்
வாரீர்- வாரீர்
பாரதியும் சொன்னானே பாரில் அன்று,
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
என்றே !