மாடுகளைக் குளிப்பாட்டியிருக்கிறானா?
காளைகளின் கழுத்தையும் திமிலையும்
தடவி விட்டிருக்கிறானா?
காலம் அறிந்து பசுவையும் எருதையும்
பழக விட்டிருக்கிறானா?
பசு மாடுகளுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறானா?
துள்ளியோடும் கன்றுக்குட்டியினைக்
கட்டிஅணைத்துக் கொஞ்சி இருக்கிறானா?
பசுவின் மடியிலிருந்துப் பால் அருந்தியிருக்கின்றானா?
மனிதர்களைப் போல் மாடுகளுக்குப்
பூ வைத்துப் பொட்டு வைத்திருக்கிறானா?
கழுத்து மணியின் கம்பீர ஒலி
கேட்டுக் கர்வப் பட்டிருக்கிறானா?
சாப்பிடும் கையால் சங்கடப்படாமல்
சாணி அள்ளியிருக்கிறானா?
பூமியைப் போல சாமியைப் போல
பொங்கல் படைத்துப் பூசை செய்தானா?
பொங்கிய கஞ்சி மிஞ்சிய சோறு
குருணைத் தவிடு கொடுத்திருக் கிறானா?
ஓயாத பிணியால் ஒருமாடு செத்தால்
ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறானா?
நாங்கள் பாதுகாக்காத மாட்டையா
மற்றொருவன் பாதுகாக்க முடியும்.?
மாடு என்றால் செல்வம் என்று
பொருள் சொல்லிப்
பூரித்த இனமல்லவா இது.
எங்கள் செல்வங்களுக்குப் பேசத்
தெரியாதது எவ்வளவு வசதியாகிப்
போய் விட்டது இவர்களுக்கு?