ஆடி மாதம்... கரை புரண்டு ஓடும் காவிரி
வெள்ளப் பெருக்கில் உள்ளம் கொள்ளை
போனது ஒரு காலம் !
காவிரி நதிக்கரையில் ஆடி பதினெட்டாம்
நாள் மணல் வீடு கட்டி மஞ்சள் பிள்ளையார்
சாட்சியாக நடக்கும் "புது மனை புகு விழா "!
காதோலை கருகுமணி அணிந்து காவிரி
தாயும் கரை கடந்து வருவாள் புது வீட்டில்
நடை பயில ! தடை ஏதும் இருக்காது
கூடி இருக்கும் குழந்தைகளின் பாட்டுக்கும்
ஆட்டத்துக்கும் !
அது ஒரு காலம் ...கனாக் காலம் !
கரை புரண்ட காவிரி நீ இன்று என் மண்ணில்
தடம் பதிக்கவே மறந்தது ஏன் ?
உன் கரையில் நின்று உன் அலை வேகம்
பார்த்த நான் இன்று நதி நீ எங்கே என்று
தேடுகிறேன்...இங்கும் அங்கும் ஓடுகிறேன்
நான் உன்னைத் தேடி !
என் மனதில் மட்டும் நீ இன்னும் ஓடுகிறாய்
ஒரு இனிய நினைவலையாக !
நினைவலையாக என் மனதில் ஓடும் நீ முத்தமிட
வேண்டும் என் மண்ணையும் மீண்டும் !
தாய் உனக்கு தெரியாதா உன் பிள்ளையின்
தேவை என்ன என்று ?