பெயரும் பின்னணியும் - அ.தட்சிணாமூர்த்தி; பக்.112; ரூ.120; அய்யா நிலையம், மனை எண்: 10, ஆரோக்கிய நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613006.
தினமணி தமிழ்மணியில் வெளிவந்த கட்டுரை உட்பட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் இலக்கணம் பற்றிய கட்டுரைகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார் பற்றிய கட்டுரைகள், இராசராச சோழனின் சமயப் பொறை குறித்த கட்டுரை, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோட்டைகள் பற்றிய கட்டுரை, அந்த மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் அரச மரபினரின் பெயர்களோடு தொடர்புடையதாக இருப்பது பற்றிய கட்டுரை, ஒவ்வொரு காலத்திலும் பெயர்கள் எவ்வாறு மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதைக் கூறும் "பெயரும் பின்னணியும்' கட்டுரை என பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் இன்றைய சமூகநிலை பற்றிய அவரின் தெளிந்த பார்வையும் பின்னிப் பிணைந்து இந்நூலில் உள்ள கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
விலங்குத்தன்மையுடைய மக்களைக் குறிப்பதல்ல மாக்கள் என்ற சொல்; அது மக்கள் என்ற பொருளிலேயே நமது முன்னோர்களால் கையாளப்பட்டது என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியுள்ளார்.
எல்லைக்குட்பட்ட எதையும் "வரை' என்ற சொல் குறிக்கிறது. இவருக்கு இவள் மனைவி என்று வரையறுக்கும் திருமண நிகழ்ச்சி வரைவு எனப்பட்டது. இவ்வாறு நிறையச் சொற்களுக்கான விளக்கங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
தீபாவளிக்கும் கார்த்திகைத் திருநாளுக்கும் உள்ள ஒற்றுமை, கள்ளர் என்ற சொல்லோடு தொடர்புடைய பல செய்திகள் என ஆழமான பல செய்திகளை மிக எளிமையாக நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.