இப்படியும் மனிதர்கள் - சீ.சந்திரசேகரன்; தொகுப்பாசிரியர்: ந.க.மங்களமுருகேசன்; பக்.160; ரூ.100; பகவதி பதிப்பகம், 1 பி, பெல்லவி அடுக்ககம், 246 (82), அரங்கராசபுரம் சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.
உளவியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பலதரப்பட்ட நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றுக்கு அவர் அளித்த சிகிச்சைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உளவியல் மருத்துவர் என்பதால், அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதைகளைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. எனினும் மருத்துவரீதியான பல அரிய தகவல்கள், உண்மைகள் நூல் முழுவதும் உள்ளன.
மனித வாழ்வில் இவ்வளவு மனநலப் பிரச்னைகளா? என்ற மலைப்பும், வியப்பும் ஏற்படுகிறது. மனநலப் பிரச்னைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். நாம் வேறு ஏதோ ஒரு நோய்க்காக உட்கொள்ளும் மருந்துகள் கூட மனநலப் பிரச்னையை ஏற்படுத்தி, தற்கொலை எண்ணத்தைத் தூண்டலாம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரத்தக் கொதிப்பு நோய்க்காக கொடுக்கப்படும் ரிசர்பின் என்ற மருந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. புற்றுநோய்கள் கூட மன அழுத்தத்தை அதிகரித்து தற்கொலை எண்ணத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது என்கிறார் நூலாசிரியர். தற்கொலை எண்ணத்துடன் இருந்த பலரை அதிலிருந்து மீட்ட பல நிகழ்வுகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
வீட்டில் ஆணின் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள், அதை எதிர்க்க வழியில்லாத நிலையில் எவ்வாறு தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. "ஹிஸ்டீரியா பொதுவான நோய்' என்ற கட்டுரையில் குறிப்பிடப்படும் ஒரு பெண் கொடுமைக்கார கணவனை, சாமி வந்து திட்டுகிறாள்; அடிக்கிறாள். இதுபோன்று நிறைய சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.