வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை) - சு.சண்முகசுந்தரம்; பக்.1550; ரூ.1600; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், வாலி போன்ற கவிஞர்களின் பாடல்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஓரிரு பாடல்கள் எழுதியவர்கள், ஒரு பாடல் மட்டுமே எழுதியவர்கள் என அனைவரையுமே சேர்த்திருப்பது சிறப்பு.
நூலின் பிற்பகுதி முழுவதும், கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் குறித்தே ஆராயப்பட்டுள்ளது. ஏழாயிரம் திரைப்பாடல்கள் எழுதி, ஏழுமுறை தேசிய விருது பெற்று, நாற்பதாண்டுகளாகத் தொய்வின்றி இயங்கிவரும் கவிஞர் வைரமுத்து, கடந்த 40 ஆண்டு தமிழ்த் திரையுலகின் அடையாளம் என நிறுவுகிறார் நூலாசிரியர்.
"இவரைப் பற்றி இவர்' என்று வரும் மேற்கோள்களைச் சற்று குறைத்திருக்கலாம். எழுத்தாளர் ஆத்மார்த்தியின் அணிந்துரை, பொன்மலரை மணமுடையதாக மாற்றுகிறது.
திரைத்துறையினர்க்கு மட்டுமல்லாது, திரைப்பட ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஓர் அரிய ஆவணமாகும்.