பாடல் 5:
கூற்றைக் கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும்
கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசதும் நாம் அறியோம்
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு
அசைந்தது ஒக்கும்
சோற்றுத்துறை உறைவார் சடை மேலதொர் தூமதியே
விளக்கம்:
உழுவை=புலி: ஆற்றில்=கங்கையில்: கோளரவு=கொலைத் தொழில் பூண்ட பாம்பு: கூற்றுவன் எதிர்கொண்ட போது அவனைக் கடந்து, அவனது வலிமையை வென்றவர் எவரும் இல்லை. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவரும் பொருட்டு கூற்றுவன் வந்த போது, அவனைக் காலால் உதைத்து, அவனை கீழே வீழச் செய்தவர் சியபெருமான் என்பதை உணர்த்தும் வகையில், கூற்றினை கடந்தவர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
சிவபெருமான் கூற்றுவனை உதைத்து அவனது வலிமையைக் கடந்ததையும், கொலைத் தொழில் புரியும் பாம்பினை அடக்கித் தனது இடுப்பினில் சுற்றிக் கொண்டதையும், கொலைத் தொழில் புரியும் புலியினை அடக்கி அதன் தோலை உரித்ததையும், அனைத்து உடல்களும் அழிந்த பின்னர், எரித்த உடல்களின் சாம்பலை உடலில் பூசி, தான் ஒருவனே உலகில் நிலையானவன் என்பதை உணர்த்தியதையும் நாம் அறியமாட்டோம். அவரது வலிமைக்கும் திறமைக்கும் முன்னர், மேற்குறித்த வீரச் செயல்கள் மிகவும் சாதாரணம் என்பதால், இவற்றை பெரிதாகவும் கருத மாட்டோம். சோற்றுத்துறையில் உறையும் சிவபெருமானின் சடையில் அடைக்கப்பட்டுள்ள கங்கை ஆற்றின் கரையில் மோதி, அந்த அலைகளால் அலைப்புண்டு, மெதுவாக சந்திரன் அசைவது மிகவும் அழகான காட்சியாக உள்ளது.