பாடல் 3:
செம்மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை தோறும்
பெய்ம்மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடமாம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட உரை மேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே
விளக்கம்:
பெய்தல்=இடுதல்; மடவார்=பெண்கள்; இங்கே தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள்;
உம்=ஒலிக்குறிப்பு; வரை=மலை, இங்கே குடகு மலை; உரை=சொற்கள், புகழ்ச்சொற்கள்;
பொழிப்புரை:
சிவந்த நிறத்தில் உள்ளதும் மென்மையானதும் ஆகிய சடைகள் தாழும் வண்ணம் காட்சியளித்த பெருமான், வேதங்களின் பாடல்களை இசையுடன் பாடிய வண்ணம், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பலி இடுவீர்களாக என்று கேட்டு அருள் புரிந்த பெருமான், உறையும் இடம் திருவியலூர் ஆகும். இந்த தலம், உம் என்ற ஒலியுடன் குடகு மலைச்சாரலில் எழும் அருவிகள் ஒன்று திரண்டு காவிரி நதியாக வர, அந்த நீரினால் பலரும் புகழ்ந்து பேசும் வண்ணம் செழித்து வளரும் வயல்கள் பொருந்திய நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.