ஆசிய சீரிஸ் கார் பந்தயம்: ஆஸ்டன் ஹாரே சாம்பியன்
இந்த சீசனுக்கான ஜே.கே.ரேஸ் ஆசிய சீரிஸ் கார் பந்தயத்தில் தென் ஆப்பிரிக்காவின்
இந்த சீசனுக்கான ஜே.கே.ரேஸ் ஆசிய சீரிஸ் கார் பந்தயத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்டன் ஹாரே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார். இதுதான் அவர் வெல்லும் முதல் சர்வதேச பட்டம்.
15ஆவது ஜே.கே.டயர்ஸ் தேசிய கார் பந்தயம் (எல்ஜிபி ஃபார்முலா 4, போலோ கோப்பை, இந்தியன் டூரிங் கார், இந்தியன் ஜூனியர் டூரிங் கார்), ஆசிய சீரிஸ் கார் பந்தயம் ஆகியவற்றின் இறுதிச்சுற்றுகள் தில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றன.
இரு நாள்கள் நடைபெற்ற இப் போட்டியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, வோக்ஸ் வேகன் போலோ கோப்பைக்கான போட்டியில் அமேயா சாம்பியன் பட்டம் வென்றார்.
இப்போட்டியின் முதல் ரேஸில் அமேயா வாலாவால்கர் (14 நிமிடம், 48 விநாடிகள்) முதலிடத்தையும், ஜெஃப்ரி ஜான் குரூகர் 2ஆவது இடத்தையும், அவ்டம்பர் ஹெடே 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இப் போட்டியின் 2ஆவது ரேஸில் பிரசாந்த் தரணி சிங் (12 நிமிடம், 18 விநாடிகள்) முதலிடத்தையும், முன்ஜால் 2ஆவது இடத்தையும், ஜெஃப்ரி ஜான் குரூகர் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
எல்.ஜி.பி. ஃபார்முலா 4 போட்டியின் 2ஆவது ரேஸில் சரண் விக்ரம் (16 நிமிடம், 19 விநாடிகள்) முதலிடத்தையும், சரோஷ் கட்டாரியா 2ஆவது இடத்தையும், திலிஜித் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். எல்ஜிபி ஃபார்முலா 4 போட்டியின் மற்றொரு சுற்றில் தமிழக வீரர் அஸ்வின் சுந்தர் பட்டம் வென்றார்.
இந்தியன் டூரிங் கார் 2ஆவது ரேஸில் லீலா கிருஷ்ணன் (14 நிமிடம் 51 விநாடிகள்) முதலிடத்தையும், பாலா விஜய் 2ஆவது இடத்தையும், சன்னி சித்து 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இந்தியன் ஜூனியர் டூரிங் கார் 2ஆவது ரேஸில் பாஹட் குட்டி (16 நிமிடம், 36 விநாடி) முதலிடத்தையும், பெரோஸ் கான் 2ஆவது இடத்தையும், ஸ்ரீராம் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
ஆசிய சீரிஸ் போட்டியின் 3ஆவது ரேஸில் ஆஸ்டன் ஹாரே (18 நிமிடம், 8 விநாடி) முதலிடத்தையும், அகில் குஷ்லான் 2ஆவது இடத்தையும், நேபிள் ஜெஃப்ரி 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இவர்கள் மூவரும் யூரோ இண்டர்நேஷனல் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் நடைபெற்ற ஆசிய சீரிஸ் 4ஆவது ரேஸில் யூரோ இண்டர்நேஷனல் அணியின் ஆதித்யா படேல் (இந்தியா) முதலிடத்தையும், ஆஸ்டன் ஹாரே 2ஆவது இடத்தையும், மெரிட்டஸ் ஜி.பி. அணியின் அய்டன் ரைட் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் சர்வதேச அளவிலான ரேஸில் வெற்றி கண்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ஆதித்யா படேல். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வியக்க வைத்த ஸ்டன்ட் ஷோ: போட்டியின் ஒரு பகுதியாக போலோ காரின் ஸ்டன்ட் ஷோ நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் இரு கார்கள் சீறிப் பாய்ந்ததோடு, பல்வேறு சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இருக்கையின் நுனிப் பகுதிக்கே வந்துவிட்டனர். கார் பந்தயத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு இந்த ஸ்டன்ட் ஷோ கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் போட்டியைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தனர். கிரேட்டர் நொய்டாவில் கடும் குளிர் நிலவியபோதும், அதை பொருட்படுத்தாது மாலை வரை ரசிகர்கள் போட்டியை ரசித்தனர். அனைத்து ரேஸ்களுமே விறுவிறுப்பாக சென்றதே அதற்குக் காரணம்.