கோவை, ஜூலை 7: கோவையில் சனிக்கிழமை நடந்த இந்திய டூரிங் கார்களுக்கான போட்டியில் சென்னை வீரர் சிவராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
15-வது ஜே.கே. டயர் தேசிய சாம்பியன் கோப்பைக்கான கார் பந்தயம் கோவை, போத்தனூர் செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடுவேயில் சனிக்கிழமை தொடங்கியது. இந்திய டூரிங் கார்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி சனிக்கிழமை காலையில் நடந்தது. இச்சுற்றில் தகுதி பெற்ற 18 பேர் மாலையில் நடந்த போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்றவர்கள் 2.1 கி.மீ. தொலைவு கொண்ட பந்தய தூரத்தை 15 சுற்றுகள் சுற்றிவர வேண்டும்.
இப்போட்டியில் முதல் 2 சுற்றுகளில் முன்னிலையில் இருந்த ராதா செல்வராஜ், தனது கார் பழுதானதால் போட்டியில் இருந்து விலகினார். 2-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை முன்னிலையில் இருந்த கோவை வீரர் வி. ராஜ் விர்தனும், காரில் ஏற்பட்ட கோளாறால் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது.
இதையடுத்து சென்னை வீரர் எம்.சிவராமகிருஷ்ணனுக்கும், கோவையின் முன்னணி கார் வீரரான சி.ராஜாராமுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
இறுதியில் சென்னை வீரர் எம்.சிவராமகிருஷ்ணன் 19 நிமிடம், 30.245 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். கோவை வீரர் சி.ராஜாராம் இரண்டாவது இடத்தையும், சென்னை வீரர் சித்தார்த் கிஷோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
ஷாத் குட்டி வெற்றி: இந்தியன் ஜூனியர் டூரிங் கார்களுக்கான போட்டியில் மொத்தம் 21 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த மும்பை வீரர் ஷாத் குட்டி வெற்றி பெற்றார். அவர் 20 நிமிடம், 39.569 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். சென்னை வீரர் எஸ்.பெரோஷ் கான் இரண்டாவது இடத்தையும், திருச்சூர் வீரர் தில்ஜித் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.