மாநில ஹாக்கி: ஐ.ஓ.பி. சாம்பியன்
திருச்சி, மே 5: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆ
திருச்சி, மே 5: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 18 முன்னணி அணிகள் பங்கேற்றன. இப் போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.ஓ.பி. அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின.
Advertisement
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வென்றது.
ஐ.ஓ.பி. வீரர்கள் வினோத்ராஜ், முத்துச்செல்வன் ஆகியோர் தலா ஒரு கோல்கள் அடித்து தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
தமிழ்நாடு போலீஸ் அணி வீரர்கள் கடைசி வரை போராடியபோதும் கோல் அடிக்க முடியவில்லை.
முதலிடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரூ.75,000, இரண்டாமிடம் பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணிக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எஃப். அணியை வீழ்த்தியது.
3-வது இடம்பிடித்த தெற்கு ரயில்வே அணிக்கு ரூ.30,000, 4-வது இடம்பிடித்த ஐசிஎஃப் அணிக்கு ரூ.20,000 பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் ரேணுகா மோகன்ராவ், தமிழ்நாடு ஹாக்கி சங்க இணைச் செயலர் ரேணுகா லட்சுமி, நிர்வாகிகள் செல்லதுரை அப்துல்லா, புருஷோத்தம் தாஸ் கண்ணா, ஜோ-ஜோ ஹாக்கி கழகத் தலைவர் ஏ.ஆர். விஜயராஜன், செயலர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.