புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 89.83% வாக்குப் பதிவானாதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதைப் பற்றி...
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 89.83 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று(ஏப். 9 ) நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 89.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
Advertisement
இந்த நிலையில், இந்தத் தேர்தலில் 89.83 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 83 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை சுமார் 9 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுவையில் 86 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவானது இதுவே முதல் முறையாகும்.
சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பெண்கள் உள்ளிட்டோர் திரண்டு வாக்களித்தனர். புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிக்குப் பிறகு தேர்தல் நடந்துள்ளது.
இந்தப் பணியின்போது இடமாறுதல், முகவரி மாறுதல், இறப்பு, வேறு மாநிலத்துக்குச் சென்றோர் என்று 8 சதவிகித அளவுக்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தூய்மையான வாக்காளர்கள் பட்டியலோடு இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு நடந்த கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 82.2 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவஹர் கூறியிருந்தார்.
இந்த வாக்குப் பதிவு சதவிகிதத்தை உயர்த்துவதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
வாக்குப் பதிவு சதம் உயர்ந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முன் மாதிரியான தேர்தலாக நடந்தது.
குறிப்பாக ட்ரோன் கண்காணிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தவிர பெண்கள் மட்டும் பணியாற்றும் வகையில் 30 வாக்குச் சாவடிகளும், இளம் அதிகாரிகள் பணியாற்றும் வகையில் 15 வாக்குச் சாவடிகளும், மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வகையில் 2 வாக்குச் சாவடிகள் உள்பட 1099 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருக்கனூரில் காவல் துறையினரின் லேசான தடியடி சம்பவங்கள் உள்பட சில மிகவும் குறைந்த அசம்பாவித சம்பவங்களே நேரிட்டன. இருப்பினும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப் பதிவு சதம் உயர்ந்து இருப்பதாலும், பெண்கள் அதிக அளவில் திரண்டு வாக்குச் சாவடிக்கு வந்ததாலும் தங்களுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று ஆளும் கூட்டணியும், எதிர்க்கூட்டணியும் சொல்லி வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் நிலையில், மக்களின் தீர்ப்பு என்ன என்பது அன்று தெரியவரும்.