கோவையில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
கோவை புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமியும், கோவை மாவட்ட டென்னிஸ் சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் போட்டித் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஜீவன் நெடுஞ்செழியனும், மூன்றாம் இடத்தில் உள்ள விஜயானந்த் மாலிக்கும் மோதினர். இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
போட்டி துவங்கியவுடன் 4-வது கேமில் விஜயானந்த் மாலிக்கின் சர்வீசை முறியடித்து நெடுஞ்செழியன் முன்னிலை பெற்றார்.
அதன்பின், தொடர்ந்து செய்த இரட்டைத் தவறுகள், திருப்பி பந்தை அடிப்பதில் செய்த தவறுகள் காரணமாக முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் விஜயானந்த் மாலிக் இழந்தார்.
2-வது செட்டின் இரண்டாவது மற்றும் நான்காவது கேமில் விஜயானந்த் மாலிக்கின் சர்வீசை முறியடித்தார் ஜீவன் நெடுஞ்செழியன். தனது சர்வீசில் 5-ஆவது கேமையும் வென்றார் ஜீவன் நெடுஞ்செழியன்.
6-வது கேமை மாலிக் வென்றார். இரண்டாவது செட்டில் 5-1 என்ற கேம் கணக்கில் ஜீவன் நெடுஞ்செழியன் முன்னிலை பெற்றிருந்தார்.
அப்போது ஜீவன் நெடுஞ்செழியன் அடித்த பந்தை திருப்பியடிக்க முயன்றபோது, கீழே விழுந்த விஜயானந்த் மாலிக்கின் கால் மூட்டு விலகியதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகினார். அதையடுத்து, ஜீவன் நெடுஞ்செழியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.