ஐஎஸ்எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை
இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வென்றது.
இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வென்றது.
இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த அக்.3 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு எஃப்சி கோவா, சென்னையின் எஃப்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கோவாவின் ஃபடோர்டாவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே அனல் பறந்தது.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் ஹோலி கோவா அணிக்கும், பாலிவுட் ஜாம்பாவான் அபிஷேக் பச்சன் சென்னை அணிக்கும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் பந்து இரு கோல் கம்பங்களை சுற்றி வந்தாலும், யாரும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் 54-வது நிமிஷத்தில் சென்னை வீரர் மெண்டோஸாவை தடுத்ததால், சென்னை அணிக்கு பெனால்டிக் கிக் வழங்கப்பட்து. அதை சென்னையின் புருனோ பெளிசாரி எடுத்தார். கோல் போஸ்டின் வலது பக்கத்தில் புருனோ அடித்த பந்தை லாவகமாக தடுத்தார் கோவாவின் கோல் கீப்பர் காட்டிமணி. எனினும் பந்தை பாலோ செய்த புருனோ பந்தை கோல் கம்பத்துக்குள் தினித்து தனது அணிக்கு முன்னணி பெற்று தந்தார்.
அடுத்த நிமிஷத்தில் கோவா கவுன்டர் அட்டாக் தொடுத்தது. அந்த அணியின் ரோமியோ கொடுத்த அருமையான கிராஸை கோலாக்கினார் ஹோகிப்.
இதைத் தொடர்ந்து 59-வது நிமிஷத்தில் சென்னைக்கு மீண்டும் ஒரு பெனால்டிக் கிக் வாய்ப்பு கிடைத்து. மெண்டோஸா அடித்த அந்த பெனால்டிக் கிக்கை அருமையாக தடுத்தார் கோவாவின் காட்டிமணி. கோல் போஸ்டின் வலப்பக்கம் மெதுவாக உருட்டிவிடப்பட்ட பந்தை மிகவும் சரியாக கணித்து தடுத்தார் கோவாவின் கோல் கீப்பர் காட்டிமணி.
சம நிலை நீடித்ததால், வெற்றி கோலை அடிப்பதில் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. ஆட்டத்தின் 88-வது நிமிஷத்தில் கோவா அணிக்கு கிடைக்க ஃபீரி கிக்கை பயன்படுத்தி அருமையாக கோல் அடித்தார் அந்த அணியின் ஜோஃப்ரீ. சென்னையின் தடுப்புச்சுவரின் கால்களுக்கு இடையே அவர் அடித்த பந்து, கோல்போஸ்டின் வலது மூலையில் நுழைந்தது.
அப்போது அரங்கமே அதிர்ந்தது. ஆட்டம் முடிவதற்கு 2 நிமிஷங்களே இருந்ததால், கோவா ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றனர்.
சுய கோல்: எனினும், 90-வது நிமிஷத்தில் சென்னை வீரர் உயரமாக தூக்கி அடித்த பந்தை தடுத்த முயன்ற கோவா கோல்கீப்பர் காட்டிமணி அதை சுய கோலாக்கினார்.
பின்னர் அடுத்த விநாடியே, சென்னை வீரர் மெண்டோஸா அருமையான ஒரு கோல் அடிக்க வெற்றி சென்னை வசமானது.
கூடுதலாக வழங்கப்பட்ட 5 நிமிஷ இன்சூரி நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சென்னை அணி 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
டோனி வாழ்த்து: சென்னை அணியின் சக உரிமையாளரான டோனி, வெற்றி பெற்ற சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு அணிகளும் திறமையாக விளையாடின. அருமையான இறுதிப் போட்டி என டுவிட் செய்துள்ளார் டோனி.