ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற மாணவருக்கு அரசின் உதவித் தொகை கிடைக்குமா?
சீனாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற 2-ஆவது ஆசிய பள்ளிகளுக்கான தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர், தமிழக அரசின் உதவித் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கோவை சித்தாப்
சீனாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற 2-ஆவது ஆசிய பள்ளிகளுக்கான தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர், தமிழக அரசின் உதவித் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
கோவை சித்தாப்புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர் என்.விவேகானந்தன். இவரது தந்தை நாகராஜ். தாய் என்.சரஸ்வதி. வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த விவேகானந்தன், சிறுவயது முதலே தடகளப் போட்டியில் பல்வேறு பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளார்.
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் 50 பதக்கங்கள், மாநில அளவிலான போட்டியில் 7 பதக்கங்கள், தேசிய அளவிலான போட்டியில் 5 பதக்கங்கள், சர்வதேச அளவில் ஒரு பதக்கம், 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் என விவேகானந்தனின் வெற்றிப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
சிறுவயது முதலே தடகளப் போட்டியில் ஆர்வம் மிகுந்த விவேகானந்தனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது சென்ற ஆண்டு சீனாவில் நடைபெற்ற 2-ஆவது ஆசிய பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிதான்.
கோவை மாநகராட்சி அளித்த ரூ.2 லட்சம் உதவித் தொகையின் மூலம் சீனாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற விவேகானந்தன், அதில் 18 வயதுக்குள்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
பல்வேறு தடைகளைத் தாண்டி விவேகானந்தன் வெண்கலம் வென்றிருந்தாலும், போட்டி முடிந்த ஒரு மாதத்திற்குள் கிடைக்க வேண்டிய சான்றிதழ், ஓர் ஆண்டுக்குப் பிறகே கிடைத்துள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2016-இல் துருக்கியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உடனடியாக தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, உதவித் தொகை கோரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் விவேகானந்தன் விண்ணப்பித்துள்ளார். ஆனால், ஆசியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில்லை என நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விவேகானந்தனுக்கு கடந்த 12-ஆம் தேதி கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, உதவித் தொகை கோரி முதல்வரின் தனிப் பிரிவுக்குத் தற்போது மனு அனுப்பி உள்ளார். பல்வேறு தடைகளைத் தாண்டி வெண்கலம் வென்றுள்ள இந்த மாணவருக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.