இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் கடந்த ஜூன் மாதம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது ஓய்வு முடிவுக்குப் பிறகு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை விளையாட மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் தயாராக இருக்கிறேன். மிக முக்கியமாக, இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த ஷிகர் தவானும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட தினேஷ் கார்த்திக் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.