முகப்பு
கிரிக்கெட்

நவம்பர் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம்?

நவம்பர் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 4 நவம்பர், 2024 at 1:02 PM
கோப்புப் படம் - ANI
பகிர்:

நவம்பர் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மெகா ஏலத்துக்கு முன்பாக, அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டு, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர்.

நவம்பர் இறுதியில்...

அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நடத்தப்படும். இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆம் தேதிகளில் நடைபெற வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரர்களை அணிகள் விடுவித்துள்ளதால், மெகா ஏலத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

10 அணிகளும் மொத்தமாக ரூ.641.5 கோடியுடன் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளன. இந்த ரூ.641.5 கோடி 204 வீரர்களுக்காக செலவிடப்படவுள்ளது. மொத்தம் ஏலத்தில் எடுக்கப்படவுள்ள 204 வீரர்களில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இதுவரை 10 அணிகளும் ரூ.558.5 கோடி செலவில் 46 வீரர்களை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.