முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் ஆண்டர்சன்! சிஎஸ்கே அணி தேர்வு செய்யுமா?
இங்கிலாந்தின் லெஜண்டரி வேகப் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெள்ளைப் பந்து போட்டிகளில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். அதன் பின், அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடவில்லை.
கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை தொகை ரூ.1.25 கோடிக்கு பதிவு செய்துள்ளார்.
இதுவரை 1,574 வீரர்கள் (1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள்) தங்களது பெயர்களை ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.
சிஎஸ்கே அணிக்கு மதீஷா பதிரானா மட்டுமே வேகப் பந்து வீச்சாளராக இருக்கிறார். அடிக்கடி காயம் காரணமாக பிரச்னை ஏற்படுவதால் சிஎஸ்கே அணி ஆண்டர்சனை அவருக்கு மாற்று வீரராக உபயோகிக்க நல்லதொரு வாய்ப்பு என சிஎஸ்கே ரசிகர்கள் கருதுகிறார்கள்.
வயதானாலும் சிஎஸ்கே அணிக்கு வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.