ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை இழந்த விரக்தியில் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கெய்ர்ன்ஸில், கசாலிஸ் திடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்தத் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான ககிசோ ரபாடா காயம் காரணமாக விலகியுள்ளார்.
வலது கணுக்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு திங்கள்கிழமை (ஆக.18) ஸ்கேன் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர், ஆஸ்திரேலியாவிலேயே தங்கி மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ககிசோ ரபாடாவுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி நிகிடி, நந்ரே பர்கர் மற்றும் வியான் முல்டர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவ்விரு அணிகள் மோதும் அடுத்த இரண்டு போட்டிகள் ஆகஸ்ட் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மெக்கேயில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.