முகப்பு
கிரிக்கெட்

அரையிறுதியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார்; டெம்பா பவுமா நம்பிக்கை!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார் என டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

அரையிறுதியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார்; டெம்பா பவுமா நம்பிக்கை!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார் என டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:10 AM
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார் என டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார் என டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியில் வேகப் பந்துவீச்சாளர்களான லுங்கி இங்கிடி, மார்கோ யான்சென், கார்பின் பாஷ் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் நான்கு முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைத்திருக்கிறது.

ககிசோ ரபாடா நன்றாக பந்துவீசக் கூடியவர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக பந்துவீசினார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன். அவரது பந்துவீச்சில் நிறைய கேட்ச்சுகள் தவறவிடப்பட்டன. அதனால், ஒரு கேப்டனாக அவரது பந்துவீச்சு எனக்கு அதிருப்தியளிப்பதாக இருக்கிறது எனக் கூற மாட்டேன்.

டெம்பா பவுமா (கோப்புப் படம்)

அவர் அணிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியவர். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகப் பெரிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் ஒருவரின் மீது பணம் கட்டி சம்பாதிப்பவனாக இருந்தால், கண்டிப்பாக ரபாடாவின் மீது என்னுடைய பணத்தைக் கட்டுவேன் என்றார்.

30 வயதாகும் ககிசோ ரபாடா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால், அதற்கு முன்பாக விளையாடிய இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் அவர் விக்கெட் வீழ்த்தத் தவறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க ரபாடாவுக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

Temba bavuma is confident that Kagiso Rabada will make an impact in the semi-final against New Zealand.

முழு கட்டுரையைப் படிக்க →