ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
டிஎன்பிஎல் தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் கலக்கியிருந்த அஸ்வினுக்கு 3-வது வரிசையில் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதனை ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், அவரது பந்து வீச்சும் சுமாராகவே அமைந்தது. 9 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 283 ரன்களும், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்.
சரியாக சோபிக்காத உள்ளூர் வீரரான அஸ்வின் மீது விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகுவதாகவும், ராஜஸ்தான் அணியில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு துவக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் துவங்கியுள்ளது.
அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான அஸ்வின், சென்னை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.