புதிய வாழ்க்கை அளித்த சிஎஸ்கே... ஜெர்ஸி படக் காட்சியுடன் நன்றி கூறிய சர்ஃபராஸ் கான்!
மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட சர்ஃபராஸ் கான் கூறியதாவது...
ஐபிஎல் மினி ஏலம் 2025: இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் ரூ.75 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.
தனக்கு புதிய வாழ்க்கை அளித்ததாக சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
துபையில் நேற்று (டிச.16) ஐபிஎல் மினி ஏலம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் சிஎஸ்கே அணியில் அன்கேப்டு வீரர்கள் அதிகபட்ச தொகைக்கு எடுத்து வரலாறு படைத்தார்கள்.
இந்திய வீரர் சர்ஃபராஸ் கானை முதல் சுற்றில் யாருமே எடுக்காத நிலையில், அடுத்த சுற்றில் குறைந்த விலைக்கே அவரை சிஎஸ்கே அணி வாங்கிவிட்டது.
மிகவும் திறமைசாலியான இவர் ஏலத்துக்கு முன்னதாக சையத் முஷ்டக் அலி 22 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
தேசிய விருது வென்ற ஜெர்ஸி படத்தில் நடிகர் நானி சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு 30 வயதுக்கு மேல் விளையாட வாய்ப்பு கிடைத்ததை ரயில்வே நிலையத்தில் கத்திக்கொண்டே கொண்டாடுவார்.
அதே காட்சியை சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “எனக்கு புதிய வாழ்க்கையை அளித்த சிஎஸ்கே அணிக்கு மிக்க நன்றி. 2026-இல் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவுவேன்” எனக் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணியில் 2015-இல் வாங்கப்பட்ட அவருக்கு பெரிதான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்பியுள்ளார்.
சையத் முஷ்டக் அலி தொடரில் 329 ரன்கள் குவித்துள்ள அவர் 82.25 சராசரியுடன் 204.34 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார்.