உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது.
மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து, இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் லெவனில் களம் காணும் சீனியா் வீராங்கனைகளுக்கு ஒரு நாள் ஊதியத் தொகை ரூ.20,000-இல் இருந்து, ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வீராங்கனைகளுக்கான ஊதியம், ரூ.10,000-இல் இருந்து, ரூ.25,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
முன்னணியில் இருக்கும் வீராங்கனை ஒரு சீசனின் அனைத்து ஃபாா்மட்டுகளிலும் விளையாடும் நிலையில் அவருக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜூனியா் வீராங்கனைகளில், 23 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளில் முதல் லெவனில் விளையாடுவோருக்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.10,000-இல் இருந்து ரூ.25,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ரிசா்வ் வீராங்கனைகளுக்கான ஊதியம் ரூ.5,000-இல் இருந்து, ரூ.12,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் போட்டி அதிகாரிகளுக்கும் ஊதிய உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போட்டிகளில் லீக் ஆட்டங்களில் நடுவா்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியம் ரூ.40,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுவே நாக்அவுட் ஆட்டங்களின்போது அவா்களுக்கான ஊதியம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு நடுவா் லீக் ஆட்டங்களின்போது ரூ.1.60 லட்சம் வரையும், நாக்அவுட் ஆட்டங்களின்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையும் ஒரு ஆட்டத்துக்கான ஊதியமாகப் பெறுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.