ஆர்சிபி புதிய கேப்டனுக்கு விராட் கோலி கூறியதென்ன?
ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக என்ன நடந்தாலும் நாம் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜத் படிதார் அல்லது கோலி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், புதிய கேப்டனாக ரஜத் படிதாரை ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு விராட் கோலி வாழ்த்திய விடியோவை ஆர்சிபி நிர்வாக வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி கூறியதாவது:
Advertisement
தகுதியானவர் ரஜத் படிதார்
ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள்.
மிகப்பெரிய பொறுப்பு
உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கௌரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் வலுவடைவீரகள் என நம்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.
ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்
ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள். என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.