தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை விரையில் தொடங்கவுள்ளனர். அணி நிர்வாகங்கள் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆலோசகராக கெவின் பீட்டர்சன்
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
44 வயதாகும் கெவின் பீட்டர்சன் கடந்த 2014 ஆம் ஆண்டு தில்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை ஒரு வீரராக இடம்பெற்று விளையாடிய கெவின் பீட்டர்சன், முதல் முறையாக பயிற்சியளிக்கும் பொறுப்பில் ஈடுபடவுள்ளார்.
தில்லி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கெவின் பீட்டர்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தில்லி அணியில் மீண்டும் இணையவுள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தில்லியுடன் எனக்கு நிறைய அருமையான நினைவுகள் இருக்கின்றன. தில்லி நகரை எனக்கு மிகவும் பிடிக்கும். தில்லி ரசிகர்களையும் மிகவும் பிடிக்கும். ஐபிஎல் தொடரில் முதல் கோப்பைக்கான தேடலில் இருக்கும் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவியாக இருப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.