முகப்பு
கிரிக்கெட்

சிறப்பாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது: தோனி

சமூக ஊடகங்கள் மற்றும் சுய விளம்பரங்கள் குறித்து தோனி கருத்து...

Updated On : 1 ஜனவரி, 2025 at 6:49 AM
தோனி (கோப்புப் படம்)
பகிர்:

சமூக ஊடகங்கள் மற்றும் சுய விளம்பரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

நவீனமயமான டிஜிட்டல் உலகில் தங்களின் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, மக்கள் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சுய விளம்பரங்கள் செய்வது போன்ற விஷயங்களில் பிரபலங்கள் ஈடுபடுவது இன்றியமையாததாக மாறியுள்ளது.

ஆனால், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடரும் மகேந்திர சிங் தோனி, ஆண்டுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிடுவதே அறிதாக உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும் சரி, ஓய்வுபெற்ற பிறகு சரி, சமூக ஊடகங்களில் இருந்து வெகு தொலைவு தள்ளியே இருக்கிறார் தோனி.

இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தோனி கூறியதாவது:

“சமூக ஊடகங்களின் மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்ததில்லை. எனக்கு மேலாளராக பலர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வற்புறுத்தினார்கள்.

நான் 2004ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கியபோது டிவிட்டர் பிரபலமாக இருந்தது, பின் இன்ஸ்டாகிராம் வந்தது. அனைத்து மேலாளர்களும் சில மக்கள் தொடர்பு பணிகளை செய்யலாம் எனத் தெரிவித்தார்கள்.

நான் அனைவரிடமும் ஒரே பதிலைதான் கூறினேன். நன்றாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது என்று” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தோனி, இந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →