இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
இந்தோனேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தோனேசியா நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் டிக்டாக், யூடியூப், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் கணக்குகள் தொடங்கி பயன்படுத்தத் தடை விதிக்கும் உத்தரவில், அந்நாட்டு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூட்டியா ஹாஃபித் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், புதியதாக விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்தோனேசிய சட்டங்களுக்கான தங்களது இணக்கக் கடமைகளை நிறைவேற்றும் வரை கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, இந்தோனேசிய அமைச்சர் ஹாஃபித் கூறியதாவது:
“எங்கள் நோக்கம் தெளிவானது. நமது குழந்தைகள் நாள்தோறும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ஆபாச படங்கள், சைபர் தாக்குதல், ஆன்லைன் மோசடி முக்கியமாக போதைப் பொருளுக்கு அடிமையாவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜகர்த்தாவில் உள்ள மெட்டா நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் திடீர் சோதனைகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.