77 வயதிலும் ஓய்வில்லா சமூகப் பணி!
ஓய்வெடுக்கும் வயதில் ஓய்வின்றி சமூக நலனுக்காக பணியாற்றும் 77 வயதான கிரிகோரி பற்றி...
ஓய்வெடுக்கும் வயதில் ஓய்வின்றி சமூக நலனுக்காக பணியாற்றி வருகிறார் 77 வயதான கிரிகோரி. இவர், திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வாய்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனராக 40 ஆண்டுகளுக்கு மேலாக அளப்பரிய பணிகளை தமிழகத்துக்கு அளித்துள்ளார். குறிப்பாக, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடர்ந்து சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் 384-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இவரது அறக்கட்டளை பணியாற்றி வருகிறது. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, விவசாயிகள் நிலையான வாழ்வாதாரங்களைக் கடைப்பிடிக்கவும் ஆதரவளிக்கின்றன.
மேலும், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பராமரிப்பும் ஆதரவும் வழங்குதல், அவசர காலங்களில் பேரிடர் நிவாரணம் அளித்தல் ஆகிய முன்னெடுப்புகளை தொடர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
மாணவப் பருவத்தில் கிரிகோரியின் ஆழ்மனதில் விழுந்த சமூக சேவை என்ற சிறிய பொறிதான், இன்று ஆலமரமாய் விருட்சம் பெற்று நிற்கிறது. இவர், மாணவராக இருந்தபோது, நீர்நிலைகளைப் புனரமைத்தல், தாய் - குழந்தை நலன், விதவைகளின் மறுவாழ்வு, பெண்களின் பாதுகாப்பு, சாதிப் பாகுபாடு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். நம்மாழ்வாருடன் இவருக்கு கிடைத்த நட்பு இயற்கை விவசாயத்தின் பக்கமும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் திருப்பியது.
அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், 1977 முதல் 1985 வரை தமிழ்நாட்டின் கிராமங்கள் முழுவதும் அடிமட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற இயற்கை விவசாய நிபுணர் ஜி. நம்மாழ்வாரைச் சந்தித்தார். கிராமப்புற மேம்பாடு மற்றும் நிலையான வாழ்வுக்கான ஒரே மாதிரியான தொலைநோக்குப் பார்வையை இருவரும் பகிர்ந்து கொண்டதால், அந்தச் சந்திப்பே கிரிகோரியின் வாழ்க்கையை மாற்றியது. நம்மாழ்வாருடன் இணைந்து, கிராம வளர்ச்சி, சமூக ஒற்றுமை, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதற்காக விரிவாகப் பயணம் செய்தார்.
1985-ல், நலிந்த மக்களுக்குச் சேவை செய்வதையும், கிராமப்புற சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட வாய்ஸ் டிரஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பை நிறுவினார். நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வேளையில், கிரிகோரி தனது சமூகப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 1987 முதல் 1993 வரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றினார். பின்னர், 1993இல், சிறுகனூரில் ஒரு கோழிப் பண்ணையை நிறுவினார், இது இவருக்கு நிதி நிலைத்தன்மையை அளித்தது. பின்னர் நம்மாழ்வார் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்காக, ஓராண்டு அவருடன் இணைந்து பணியாற்றினார். இயற்கை வேளாண் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் கிரிகோரியும் நம்மாழ்வாரும் இணைந்து இயற்கை வேளாண் இணையம் என்ற அமைப்பை நிறுவினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பல பயிர் சாகுபடி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிலையான நடைமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, 150 இயற்கை வேளாண் இணைய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 7,800 விவசாயிகளை படிப்படியாக ரசாயன அடிப்படையிலான விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளனர்.
1998-ஆம் ஆண்டில், பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநில சுற்றுச்சூழல் துறை, வாய்ஸ் டிரஸ்ட்டை அணுகியபோது, கிரிகோரியின் பணி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விரிவடைந்தது. முதலில் திருவானைக்கா பகுதியில் இருந்த மாநகராட்சிப் பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றத்தை தொடங்கி, 359 பள்ளிகளில் இவரது சுற்றுச் சூழல் மன்றம் இயங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது, 250 பள்ளிகளில் தேசிய பசுமைப் படையை உருவாக்கியுள்ளார்.
உள்ளூர் சமூகங்களின் ஆதரவுடன், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கிராமங்கள் மற்றும் பொது இடங்களில் சுமார் 6.5 லட்சம் நாட்டு மரக்கன்றுகளை வாய்ஸ்ட் டிரஸ்ட் நட்டுள்ளது. இன்று, அந்த மரக்கன்றுகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காடுக்கு மேல், சூழலியல் சமநிலையை மீட்டெடுக்கும் மரங்களாக வளர்ந்துள்ளன.
1999-ல், வாய்ஸ் டிரஸ்ட் சமூகப் பணிகளில் கால் பதிக்கத் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை, இயன்முறை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த அறக்கட்டளை, புரவலர்கள் மூலம் 444 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நிலையான வருமானம் ஈட்ட உதவும் வகையில், தலா ஒரு ஆடு வழங்கி, ஆடு வளர்ப்போராக மாற்றியுள்ளது.
2006-ஆம் ஆண்டில், நண்பர்களின் ஆதரவுடன், ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நட்பு சிறார் இல்லம் என்ற அமைப்பை நிறுவினார். இது தொடங்கப்பட்டதிலிருந்து, இல்லத்தைச் சேர்ந்த 87 குழந்தைகள் தங்கள் கல்வியை முடித்து, பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர். தற்போது, 37 குழந்தைகள் அறக்கட்டளையின் பராமரிப்பில் தொடர்ந்து படித்து வருகின்றனர். பலருக்கு, இந்த இல்லம் ஒரு தங்குமிடத்தை விட அறிவுசார் கோயிலாக மாறியுள்ளது. தற்போது, சிறார் இல்லம், குரல் பள்ளி, இயற்கை விவசாயம், திறன் மேம்பாடு, சுற்றுச் சூழல் காவலர், எங்கள் மரம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் சுயசார்பு முயற்சிகள் என்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இந்த அறக்கட்டளை வென்றுள்ளது.
இதுதொடர்பாக, கிரிகோரி நம்மிடையே கூறுகையில், சமூகங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைத்துக் கொள்ள அதிகாரம் பெறும்போதுதான் உண்மையான வளர்ச்சி தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கான கண்ணியம், சமத்துவம் மற்றும் நிலையான மாற்றம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பே எங்கள் பயணத்தை வழிநடத்தி வருகிறது. எங்கள் சமூகங்கள், நட்பு வட்டங்கள், ஆதரவாளர்களுடன் இணைந்து, ஒவ்வொரு தனிநபரும் செழித்து வளர அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். சமூகத்தின் மீதான அக்கறையே என்னை துடிப்புடன் இயக்கி வருகிறது என்றார்.