நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது குறித்து...
கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை (மார்ச் 6) தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் சிறார்களின் நலனுக்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் இந்தத் தடை விதிக்கப்படுவது நாடு முழுவதும் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், இதற்கான அமலாக்க நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சிறார்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும், அச்சுறுத்தும் பதிவுகளால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தடையானது அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பக் கருவிகளைப் பெரிதும் சார்ந்துள்ள இளம் தலைமுறையினரை மிகவும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.