4-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்; தொடரிலும் முன்னிலை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா 28 ரன்கள், ஷிவம் துபே 22 ரன்கள், அக்ஷர் படேல் 21 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரில் இந்தியா முன்னிலை
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 25 ரன்களும் எடுத்தனர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 ரன்களும், டிம் டேவிட் 14 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 1.2 ஓவர்களில் வெறும் 3 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அக்ஷர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 8) பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
The Indian team stunned Australia by winning the fourth T20I by 48 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.