ஆஸ்திரேலியா அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!
உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தூரில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சினாலோ ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளர்க் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அலானா கிங் 7 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, மேகன் ஷுட், கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்டனர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜியார்ஜியா வோல் 38 ரன்கள், அன்னாபெல் சதர்லேண்ட் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Australia won the World Cup match by 7 wickets against South Africa.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.