மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் வெறும் ரூ. 100 மட்டுமே..!
மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் ரூ. 100 ஆக நிர்ணயம்...
இந்தியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை போட்டியைக் காண்பதற்கான நுழைவுக் கட்டணம் ரூ. 100 ஆக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகக் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறை.
ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப். 30 முதல் நவ. 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
அசாம் மாநிலத்தில் குவஹாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன. அந்த போட்டியின் போது மிக பிரம்மாண்டமாக தொடக்கவிழா நடத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக வெறும் ரூ. 100 -க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளதாக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 9 ஆம் தேதிமுதல் தொடங்கப்படவுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க தொடர்ந்து பல முன்னெடுப்புகளை ஐசிசி எடுத்துள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணியின் பரிசுத் தொகையை ரூ. 122 கோடியாக அறிவித்துள்ளது. இது கடந்தாண்டு நடைபெற்ற ஆடவர் உலகக் கோப்பை பரிசுத் தொகையைவிட அதிகமாகும்.