இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வ் வெற்றிபெற்றது.
ஆட்டத்துக்கு முன்னதாக, டாஸ்ஸின் போதும், போட்டி முடிந்தும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்தனர்.
பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த விவகாரத்தில் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை(ஜிம்பாப்வே) நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.
அவ்வாறு நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகும் யோசனையில் பாகிஸ்தான் வாரியம் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஐசிசியும் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து விலக முடிவு செய்திருந்தால், இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலையில், குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று (செப்.17) மோதும் நிலையில், அந்த ஆட்டத்துக்கான பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்ட், போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டி நடுவராக நியமிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.