இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
பெத் மூனி சதம் விளாசல்; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலீஸா ஹீலி மற்றும் ஜியார்ஜியா வோல் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், அலீஸா ஹீலி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, ஜியார்ஜியா வோல் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ஜியார்ஜியா வோல் 68 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், எல்லிஸ் பெர்ரி மற்றும் பெத் மூனி ஜோடி சேர்ந்தனர்.
களமிறங்கியது முதலே பெத் மூனி அதிரடியில் மிரட்டினார். எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதிலும், பெத் மூனி அதிரடியை நிறுத்தவில்லை. அதிரடியாக விளையாடிய அவர் 57 பந்துகளில் சதம் விளாசி, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அவர் 75 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 23 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிராந்தி கௌத் மற்றும் ஸ்நே ராணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.