டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற போட்டியில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நேபாளம் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நேபாளம் இத்தாலி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆரிஃப் ஷேக் 27 ரன்களும், கேப்டன் ரோஹித் பௌடல் 23 ரன்களும் எடுத்தனர். ஆசிஃப் ஷேக் 20 ரன்கள் எடுத்தார்.
இத்தாலி தரப்பில் கிறிஷன் கலுகாமேஜ் 3 விக்கெட்டுகளையும், பென் மனேண்ட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலி ஹாசன், ஜே ஜே ஸ்மட்ஸ் மற்றும் ஜஸ்பிரித் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இத்தாலி அபார வெற்றி!
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி, 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜஸ்டின் மோஸ்கா மற்றும் அந்தோனி மோஸ்கா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 60 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), அந்தோனி மோஸ்கா 32 பந்துகளில் 62 ரன்களும் (3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இத்தாலி அணி, குரூப் சி பிரிவில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இத்தாலி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.