நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் அச்சுறுத்தலாக இருப்பாரா என்பது குறித்து மார்க் சாப்மேன் பேசியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இலங்கையில் இன்று (பிப்ரவரி 20) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் விளையாடுகின்றன.
சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நாளை (பிப்ரவரி 22) முதல் தொடங்குகின்றன. கொழும்பில் பிரேமதாசா திடலில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் நியூசிலாந்து அணியின் பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பாரா என்பது குறித்து நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் மார்க் சாப்மேன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக மார்க் சாப்மேன் பேசியதாவது: உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு தனித்துவமானது. அவர் கிரீஸில் நின்று மிகவும் மெதுவாக பந்தை வீசுகிறார். அவரது பந்துவீச்சுக்கு அவரது தனித்துவமான ஆக்ஷன் பலம் சேர்க்கும் காரணியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் மட்டுமின்றி, உண்மையில் நிறைய நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அச்சுறுத்தும் விதத்தில் பந்துவீசும் திறன் படைத்தவர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால், உஸ்மான் தாரிக்கை நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பயன்படுத்துவார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.