டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 55 போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை 13 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றை எட்டுவதற்காக அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சு குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் கொழும்புவில் நேற்றிரவு நடைபெற்ற பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் தாரிக் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக், ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக தனது கையை மடக்கி பந்து வீசுவதாக பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். ஐசிசி விதிமுறைப்படி, பந்துவீசும் கை 15 டிகிரிவரை வளைந்திருக்கலாம்.
ஆனால், உஸ்மானின் கை அதற்கும் மேல் வளைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே மாதிரி ஐசிசியிடம் பந்துவீசி, இரண்டு முறை ஒப்புதலும் பெற்றிருக்கிறார் உஸ்மான் தாரிக்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது விக்கெட்டாகி வெளியே சென்றபோது கேமரூன் கிரீன், அவர் கையை மடக்கி விதிமுறைக்கு மாறாக பந்துவீசுவதாக சைகை காட்டியிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சை சோதிக்க வேண்டும் என்றும், அவரின் பந்து வீச்சு கேதர் ஜாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் போலவும் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உஸ்மான் தாரிக்குக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெங்கால் மற்றும் ஆர்சிபி அணி முன்னாள் வீரரான ஸ்ரீவஸ்தவ் கோஸ்சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், “கால்பந்து போட்டியில் பெனால்டி ஷார்ட்டின் போது ஒரு நொடிகூட நின்றுவந்து கோல் அடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இதை எளிதில் விட்டுவிடக்கூடாது” எனப் பதிவிட்டிருந்தார்.
அதனை மறுபதிவிட்டு பதிலளித்திருக்கும் அஸ்வின் தனது பதிவில், “கால்பந்தில் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நடுவர் அல்லது பந்துவீச்சாளரிடம் தெரிவிக்காமல் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றியோ ஸ்வீப் ஷார்ட்டோ ஆடலாம் என்று இருக்கும்போது கட்டுப்பாடுகள் பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் வரையறுக்கப்படுவது ஏன்? அவர்கள் முதலில் விதிகளை மாற்ற வேண்டும்.
அவர் 15 டிகிரி சரியாக கையை மடக்காமல் பந்து வீசுகிறாரா? என்பதை ஐசிசிதான் சோதிக்க வேண்டும், அவர் க்ரீஸில் ஒரு நொடி நின்று பந்து வீசுவது சரியா தவறா எனத் தெரியாது. ஆனால், அவர் விதிப்படிதான் பந்து வீசுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.