ஆகிப் நபி 5 விக்கெட்டுகள்: 293 ரன்களுக்கு ஆல் அவுட்டான கர்நாடகம்!
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் அசத்தும் ஜம்மு காஷ்மீர் அணி குறித்து...
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்த்த கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
கர்நாடகத்தில் நடைபெற்றும் வரும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த அணியில் சுபம் பண்டிர் 121, சஹில் லோட்ரா 72, கன்னையா வதாவன், பராச் டோக்ரா தலா 70 ரன்கள் எடுத்தார்கள். கர்நாடக அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய கர்நாடக அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மயங்க் அகர்வால் மட்டுமே 160 ரன்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் அணியில் ஆகிப் நபி தார் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த சீசனில் 7ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த மயங்க் அகர்வால் விக்கெட்டை எடுத்ததும் இவர்தான். சுனில்குமார், யுத்வீர் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து உதவினார்கள்.
தற்போது ஜம்மு காஷ்மீர் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.