மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 178 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் விளையாடியது.
அரைசதம் விளாசிய கௌதமி நாய்க்
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய கௌதமி நாய்க் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 55 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் 27 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். ராதா யாதவ் 8 பந்துகளில் அதிரடியாக 17 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் கேப்டன் ஆஷ்லே கார்டனர் மற்றும் கஷ்வி கௌதம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரேணுகா சிங், மற்றும் சோஃபி டிவைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.