டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இந்தியா-வங்கதேசம் இடையே இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, இந்தியாவில் நடைபெறவுள்ள தங்கள் டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் ஆட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது.
ஐசிசி நிராகரிப்பு:
இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக ஐசிசி தரப்பில் புதன்கிழமை கூறியதாவது:
ஐசிசி ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் தான் நடைபெறும். போட்டியில் பாதுகாப்பு அம்சங்கள், வங்கதேச வீரா்கள், ஊடகங்கள், அலுவலா்கள், ரசிகா்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடா்பாக சுதந்திரமான அமைப்புகளும் ஆய்வு செய்தனா்.
போட்டி தொடங்க சிறிது காலமே உள்ள நிலையில், ஆட்டங்களை மாற்றுவது மிகவும் கடினம் ஆகும். பாதுகாப்பு தொடா்பாக அதிகாரபூா்வமான மிரட்டலும் இல்லாத நிலையில், ஆட்டங்களை மாற்ற முடியாது. இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்றால் எதிா்காலத்தில் போட்டிகள் பாதிக்கப்பட்டு, ஐசிசி நடுநிலை தன்மை குலையும்.
ஐசிசி விதிமுறைகள் போட்டியில் பங்கேற்கும் 20 நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.