ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
ஐபிஎல் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா விலகியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 28) முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உடல்தகுதி சோதனையில் தேர்ச்சிப் பெற தவறியதால் அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெறாததால், அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் கொடுக்காததாகக் கூறப்படுகிறது.
31 வயதாகும் நுவான் துஷாராவுக்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் உடல்தகுதி சோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதிலும் தேர்ச்சி பெற தவறும்பட்சத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து அவர் முழுமையாக விலக நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களுக்காக யஷ் தயாள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது நுவான் துஷாராவும் விலகியுள்ளார். தொடக்கப் போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட்டும் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.