பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவு: இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம்
பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்துக்கு உதவிகளையும் செய்வதாக உறுதி...
பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பு பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் (76), மும்பையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, திங்கள்கிழமை (மார்ச் 30) காலை தனது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகத்தினரால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ உடன் பணியாற்றி வந்த ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு எல்லாவித உதவிகளையும் செய்வதாகவும் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “எங்களின் ஒளிபரப்புச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்த அர்ப்பணிப்பு மிகுந்த ஒளிபரப்புப் பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் ஐபிஎல் நிர்வாகம் வழங்க உறுதி அளிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்கூராய்வில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.