முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு முடிவு: தெ.ஆ. அணியில் மீண்டும் இடம்பெறுவது பற்றி டி வில்லியர்ஸ்

எனக்கு இடம் இல்லை என்றால் அப்படியே இருக்கட்டும். அல்லது எனக்கு...

Updated On : 19 ஏப்ரல் 2021, 3:40 pm IST
பகிர்:

2018 மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடம்பெறுவது பற்றி கூறியதாவது:

தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சருடன் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு பேச வேண்டும். இதுபற்றி ஏற்கெனவே பேசியுள்ளோம். கடந்த வருடம், அணிக்கு மீண்டும் வருகிறீர்களா என பெளச்சர் கேட்டார். கண்டிப்பாக எனப் பதில் அளித்தேன். ஐபிஎல் முடிந்த பிறகு என்னுடைய ஃபார்ம் மற்றும் உடற்தகுதியைக் கொண்டு இதுபற்றி விரிவாகப் பேசுவோம். 

Advertisement

Advertisement

அதேபோல தென் ஆப்பிரிக்க அணியில் சிறப்பாக விளையாடி வருபவர்களையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். எனக்கு இடம் இல்லை என்றால் அப்படியே இருக்கட்டும். அல்லது எனக்கு ஓர் இடம் இருக்கும் என்றால் நன்று. பெளச்சருடன் மீண்டும் உரையாட ஆர்வமாக இருக்கிறேன். அதற்குப் பிறகு வருங்காலம் பற்றி திட்டமிடலாம் என்றார். 

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தெ.ஆ. தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தெ. ஆ. அணி 7-ம் இடம் பிடித்தது. ஐபிஎல் 2020 போட்டியில் 14 ஆட்டங்களில் 454 ரன்கள் குவித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 48,1, 76* எனச் சிறப்பாக விளையாடி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.