ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும்: கிறிஸ் லின்
ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும்...
ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கூறியுள்ளார்.
ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் மே 23 அன்று முடிகிறது. ஐபிஎல் போட்டி மே 30 அன்று நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஆஸி. வீரர்களின் ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருந்தும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு 10% பெறுகிறது. இந்த வருடம் அந்தத் தொகையைத் தனி விமானத்துக்குச் செலவழிக்கலாமா என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ளோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸி. அரசு தனி விமானம் அனுப்பும் என நம்புகிறோம். நிலைமையை அறிந்துதான் ஒப்பந்தம் செய்துள்ளோம். போட்டி முடிந்தபிறகு பாதுகாப்பாக நாங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவேண்டும் என்றார்.