தோனி, கோலி செய்வதுபோல செய்தேன்: ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி!
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமான ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் பேசியதாவது...
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது.
60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஜாஸ் பட்லர். இறுதிவரை போராடி தனியாளாக வெற்றியைப் பெற்று தந்தார்.
Advertisement
ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் பேசியதாவது...
நம்பிக்கை மட்டும்தான் இன்றைய ஒரே வழி. ஆரம்பத்தில் நான் சரியான ரிதம் கிடைக்காமல் தடுமாறினேன். பரவாயில்லை. அமைதியாக இரு; நிச்சயமாக ரிதம் கிடைக்கும் என நான் எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன். ஐபிஎல் வரலாற்றில் பலமுறை இதுபோல நடந்திருக்கிறது.
தோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன். அவர்கள் பலமுறை ஐபிஎல்-இல் இதைச் செய்திருக்கிறார்கள். நான் அதையே இன்றும் செய்ய நினைத்தேன். பயிற்சியாளர் குமார் சங்ககாரா இதைத்தான் சொல்லுவார். களத்தில் இருக்க வேண்டும். எதாவது ஒரு புள்ளியில் போட்டி மாறும். ஒரு ஷாட் மூலமாக நமக்கு ரிதம் கிடைக்கலாம் எனக் கூறுவார். அதுதான் நடந்தது. இந்த வெற்றி எனக்கு மிகவும் மன நிறைவாக இருக்கிறது என்றார்.