டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டுமே தனது பெயர் பயன்படுத்தப்படுவதாக இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், உலக அளவில் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் தனது பெயர் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் தனக்குள் இன்னும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் என்னுள் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.