தினேஷ் கார்த்திக் உடனான நட்பு குறித்து மனம் திறந்த விராட் கோலி!
தினேஷ் கார்த்திக் உடனான தனது நட்பு குறித்து இந்திய அணியின் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் உடனான தனது நட்பு குறித்து இந்திய அணியின் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தினேஷ் கார்த்திக் அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் நேற்று முன் தினம் விளையாடினார். ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியே ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடும் கடைசி போட்டியாகும். அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் மிகவும் நேர்மையானவர் எனவும், தனது கடினமான காலங்களில் ஊக்கமளித்துள்ளார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே தினேஷ் கார்த்திக்குடன் நிறைய சுவாரசியமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவர் சிறந்த மனிதர். கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்கள் குறித்தும் அவருக்கு மிகுந்த அறிவு இருக்கிறது. தினேஷ் கார்த்திக்குடன் பேசுவது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நம்பிக்கையின்றி நான் தடுமாறினேன். தினேஷ் கார்த்திக் எனக்கு அருகில் அமர்ந்து, எனது தடுமாற்றம் தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தது. தினேஷ் கார்த்திக் மிகச் சிறந்த வீரர். அவரது எதிர்கால பயணங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4842 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.