சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்
சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் இடையிலான போட்டியில் குஜராத்தின் பந்துவீச்சைச் சிதறடித்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ஒரே இரவில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
இந்தப் போட்டியில் 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய அவர் 38 பந்துகளில் 101 ரன்களில் எடுத்து விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். அதிரடி காட்டிய அவருக்கு முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆட்டநாயகன் விருதை வென்ற சூரியவன்ஷிக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?
இந்த நிலையில் இதுகுறித்து சூரியவன்ஷியின் சிறுவயது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கூறும்போது, “ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகவும் பெருமைமிக்க தருணம். பிகார் போன்ற மாநிலங்களில் அதிகம் பிரபலம் இல்லாத கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் சிறந்து விளங்குவது அனைவருக்கும் நம்பிக்கையின் உணர்வைத் தரும். இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார்.
இதேபோன்று அவர் சிறப்பாக விளையாடினால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அவர் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார். நாங்கள் அவருக்கு தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறோம். இருந்தாலும் அவரிடம் இயற்கையான திறமைகள் நிறைய இருக்கின்றன.
அவர் மூத்த வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள் என்ன கூறினாலும் அதைக் கேட்டுக் கொள்கிறார். தொடக்கம் முதலே அதிரடியாகவும் விளையாடுகிறார். எப்படி விளையாட வேண்டும்; ஆட்டத்தை எப்படி மாற்ற வேண்டும் என்ற அணுகுமுறை சூரியவன்ஷியிடம் இருக்கிறது என்றார் பயிற்சியாளர் மணீஷ் ஓஜா.
இதையும் படிக்க: சதமடித்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் பரிசளித்த பிகார் முதல்வர்!