60 வயது வரை ஐபிஎல்... சிவகார்த்திகேயனுக்கு தோனி பதில்!
சிவகார்த்திகேயனின் விருப்பத்துக்கு தோனி பதில்...
நடிகர் சிவகார்த்திகேயனின் விருப்பத்துக்கு தோனி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பழைய வீரர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி நேற்று (மார்ச் 22) சேப்பாகத்தில் நடைபெற்றது.
இதில், மாத்யூ ஹைடன், சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களுடன் தோனி உள்பட சிஎஸ்கே அணியினர் கலந்துகொண்டு சுவாரஸ்யப்படுத்தினர்.
இறுதியாக, இந்த ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடக்கூடிய வீரர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்கள் மேடையில் ஏற்றப்பட்டனர்.
அப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டார். நிகழ்வில் பேசிய எஸ்கே, “எவ்வளவு தோல்விகள் வந்தாலும் ரசிகர்கள் எப்போதும் சென்னை சூப்பர் சிங்ஸுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சிஎஸ்கே குடும்பம்தான். தல தோனியை அருகே பார்த்ததும் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது.
ஆட்டத்தில் ஜெய்ப்போமா? மாட்டோமோ? என்கிற கேள்விக்கே இடமில்லாமல் காட்டின் சிங்கமான தோனி நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் அங்கமாக ருத்ராஜ் இணைந்துள்ளார்.” என்றார்.
மேலும், தோனியிடம், “சார், உங்களிடம் ஒருமுறை ஓய்வு பெறப்போகிறீர்களா? எனக் கேட்டபோது, ‘கண்டிப்பாக இல்லை’ என்றீர்கள். ஒவ்வொரு ஆண்டும் உங்களிடமிருந்து இந்த பதில் மட்டும் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 60 வயது வரை ஐபிஎல் விளையாடுங்கள்” எனக் கூறினார்.
இதற்கு தோனி, “ஒவ்வொரு நாளும் என் உடல் தகுதி குறைந்துகொண்டே வருகிறது. ஆனாலும், நான் முயற்சி செய்கிறேன்” என சிரித்துக்கொண்டே பதிலளித்ததார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.